காலணியைக் கையிலேந்து…
மீத்தேன் ஆழ்துளைக்கிணற்றை மக்கள் செருப்பால் அடிக்கும் காட்சி... |
செருப்பால் அடிப்பேன்
என்று சொல்வது
தமிழர்களின் உச்சக்கட்ட
கோபத்தின் வெளிப்பாடு…
அந்த வார்த்தைகளை
உணர்ச்சிப்பூர்வமாக உக்கிரமாக
நெடுவாசலில்
நாம் நேரடியாகக் கண்டோம்…
04/03/2017 அன்று
அக்கப்போர் வாசல்
செல்வதைத் தவிர்த்து விட்டு
அறப்போர் நடக்கும்
நெடுவாசல் நோக்கி
காரைக்குடித் தோழர்கள் பயணித்தனர்.
நெடுவாசல் நெடுக…
இயற்கை என்னும்
இளைய கன்னி சிரிக்கிறாள்…
தென்னை… வாழை… கரும்பு… பருப்பு என…
பசுமை என்னும்
அன்புத்தாய் பரவசம் தருகிறாள்…
பாவிகள் விடுவார்களா…
நீரோடும் பூமியில்
நெருப்பெரிய விட்டார்கள்..
கண்ணைக்கெடுத்து சித்திரம் வரைகிறார்கள்…
கருவழித்து தலைமுறை காக்கிறார்கள்…
உருவழித்து உடைகள் தருகிறார்கள்…
நீரை அழித்து நெருப்பைத் தருகிறார்கள்…
எரிவாயுத் தேவைக்கு
எத்தனையோ வழி இருக்க…
எரிவாயு மேடைக்கு
மக்களை இட்டுச்செல்கிறார்கள்…
எரியப்போகும் கொள்ளிவாய்க்கு எதிராக…
மக்கள் துள்ளி எழுந்துவிட்டனர்…
நெருப்புக்கு எதிராக மக்கள்…
நெருப்பாய் கொதித்து விட்டனர்…
முதியவர்கள்… இளையவர்கள்...மாணவர்கள்…
ஆண்கள்...பெண்கள்...படித்தவர்கள்.. பாமரர்கள்…
உழைப்பவர்கள்… உணர்வு கொண்டவர்கள் என..
நெடுவாசல் நிறைந்திருக்கிறது….
நெஞ்சம் நிமிர்ந்து நிற்கிறது…
“சனியனே… ஒழிந்து போ” என
தாய்மார்கள் செருப்பைக் கையிலெடுத்து…
மீத்தேன் ஆழ்துளைக்கிணற்றை
ஆவேசமாக அடித்த காட்சி…
முறத்தால் புலியடித்த
முன்னோரின் நினைவைத் தந்தது…
தமிழன் தலை சாய்ந்து விட்டான்…
உணர்வற்று ஓய்ந்து விட்டான்…
என்றொரு ஏக்கம்
எப்போதும் மனதில் உண்டு..
இதோ ஏக்கம் தீர்ந்தது…
ஜனவரியில்… கடலலை திரண்டது..
பிப்ரவரியில்… கழனிவாசல் நிமிர்ந்தது…
வறட்சி ஒழிந்தது…
திரட்சி துவங்கியது…
அதோ… புரட்சி தெரிகிறது…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக